சர்ச்சைப் பகுதிகளை நீக்கும் தஸ்லிமா
சர்ச்சைப் புயலில் சிக்கியுள்ள தஸ்லிமா நஸ்ரின் தற்போது டெல்லியில் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பாதுகாப்பது தங்களது கடமை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு அவர் எழுதிய த்விகாந்தோ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சில சர்ச்சைப் பகுதிகளுக்கு எதிராக முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை முன்வைத்தே கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது.
இந்த நிலையில் த்விகாந்திதோ நூலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி விட தஸ்லிமா தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி விட நான் தீர்மானித்துள்ளேன். யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. எனது முடிவின் மூலம் நான் இந்தியாவில் அமைதியாக வாழ முடியும் என்று நம்புகிறேன் என்றார் தஸ்லிமா.
தஸ்லிமாவின் இந்த நூல் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளையும், கலவரங்களையும், மோதல்களையும் ஏற்பட வழி வகுத்துள்ளது.
த்விகாந்திதோ நூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கி விடுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த 29ம் தேதி தஸ்லிமாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், அடைக்கலம் என்று வந்தவர்கள், அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். வந்த இடத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்தே த்விகாந்தோவின் சர்ச்சைப் பகுதிகளை நீக்கி விட தஸ்லிமா முடிவெடுத்ததாக தெரிகிறது.
தஸ்லிமாவின் முடிவு குறித்து ஜமாத் உல் உலமா ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மதானி கூறுகையில், தஸ்லிமா தனது முடிவுப்படி நடந்து கொண்டால் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விடும் என்றார்.