சாயப் பட்டறைகளால் 5000 ஹெட்டேர் நிலம் பாழ்!
கரூர்: கரூர் மாவட்டத்தில், சாயப் பட்டறைகளால் 5000 ஹெட்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூரில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கரூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாமக முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி முன்னிலை வகித்தார்.
அப்போது கூட்டத்தில் வழக்கறிஞர் பி.ஆர்.கே. குப்புசாமி, தமிழக சுற்றுச் சூழல் மாநில தலைவர் அந்தோணிசாமி, சுவாதி பெண்கள் அமைப்பு தலைவி கிறிஸ்டினா சாமி, மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினர், விஞ்ஞானிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசுகையில், 1997 - 98 ல் காவிரி படுகையில் 20,422 டன் உரம் பயன் படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் வரும் காலத்தில் செயற்கை உரங்களுக்கு முடிவு கட்டவேண்டும். இயற்கை உரங்களுக்கு மாற வேண்டும். அப்போது தான் விவசாயம் செழிக்கும். நிலம், நீர், சுற்றுசூழலும் மாசுபடாது.
கரூரில் சாயம் ஏற்றப்படும் ஜவுளிளின் பங்கு மட்டும் தமிழக அளவில் சுமார் 70 சதவீதம் உள்ளது. 1990 ல் நச்சு சாயங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அமராவதி ஆறு உள்பட 12 கால்வாய்களில் செல்லும் மாசு நிறைந்த தண்ணீரால் 5000 ஹெட்டேர் விவசாய நிலங்கள் பயனற்றுப்போய் விட்டது.
எனவே மாசு கலந்த நீரை சாயபட்டறைகள் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும்.
நொய்யல் ஆற்று தண்ணீரை பயன்படுத்தி பாசனம் செய்து பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். கரூர் நகரில் உற்பத்தி செய்யப்படும் கழிவு நீரின் அளவு 78.33 லட்ச லிட்டர் ஆகும். எனவே மாசு கலந்த நீரை சாயபட்டறைகள் கண்டிப்பாக சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்றனர்.