கருணாநிதிக்கு எதிராக இந்து மக்கள் கட்சி கருப்பு கொடி
கடலூர்: நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வரும் முதல்வர் கருணாநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
கடலூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் மலேசியா முஸ்லிம் நாடாக மாறியுள்ளது. தமிழர்களின் கோவில்கள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடத்தியதற்கு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது 8 கோடி தமிழர்களின் பிரச்சனை அல்ல. இது இந்தியாவில் 100 கோடி மக்கள் வாழும் இந்து சமுதாயத்தின் மீது நடக்கும் தாக்குதல் ஆகும். இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்து அமைப்பை சேர்ந்த தென்காசி ரவி பாண்டியன், குமார் பாண்டியன், சேகர் பாண்டின், செந்தில் பாண்டியன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு அரசு உடனே நிவாரணம் வழங்கவேண்டும்.
நிவாரணம் வழங்கவில்லையென்றால் நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம்.
ஹிந்து கடவுளை அவமதிக்கும் வித்தில் செருப்புடன் நடிகை குஷ்பு அமர்ந்திருந்தது கண்டிக்கதக்கது. குஷ்புவின் இந்த செயலுக்காக கும்பகோணம், சென்னை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளோம். குஷ்பு மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவோம் என்றார்.