கேரள கடற் பகுதிக்கு இடம் பெயரும் விடுதலைப் புலிகள்
விடுதலைப்புலிகளுக்கு ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட தமிழக கடற்கரைப் பகுதிகளிலிருந்து பெட்ரோல், டீசல், மருந்து பொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன.
ஆனால் விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றவுடன், தமிழக கடலோரப் பகுதிகளை கடலோரக் காவல் படையினரும், கடற்படையினரும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். கடற்படைக் கப்பலும் முகாமிட்டு படு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் முன்பு போல தமிழக கடற் பகுதிகளை பயன்படுத்துவது புலிகளுக்கு சிரமமாகியுள்ளது. இந்த நிலையில், கேரள கடற் பகுதிகளை புலிகள் தங்களது புதிய தளமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவின் மலபார் கடற்கரை பகுதிகளில் தற்போது எந்த சிரமமும் இல்லாமல் ஆயுதங்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களை கடத்தி வருகிறார்களாம். இந்த செய்தியை கேரள மாநில உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி புன்னூஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் கேரள முதல்வர் அச்சுதானந்தன் இதை மறுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய உளவுப் பிரிவிடமிருந்து எங்களுக்கு இதுவரை எந்தத் தகவலோ, எச்சரிக்கையோ வரவில்லை. அப்படி வந்தால் கடும் நடவடிக்ைக எடுத்து புலிகளின் நடமாட்டத்தைத் தடுப்போம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கடற்படைத் தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறுகையில், கேரள கடலோரங்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படும். தற்போது தமிழகப் பகுதிகளில் உள்ள கண்காணிப்புப் படையினரை கேரளப் பகுதிகளிலும் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.