வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர் ரமணன் கூறியதாவது,
சென்னை-மசூலிபட்டினத்திற்கு இடையில் தமிழக-ஆந்திர கடற்கரையை ஒட்டி வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.
தமிழகத்தை பொறுத்தவரை சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கம், விமான நிலையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், அரக்கோணம், சோழவரம், செங்குன்றம் ஆகிய இடங்களில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வளி மண்டலத்தின் சுழற்சி காரணமாக மேலும் ஒரு நாள் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தின் சென்னை உட்பட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்த வருடம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் வழக்கத்தைவிட 12 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை என்றார் ரமணன்.