அதிமுக எம்.பி. ஜோதிக்கு முன்ஜாமீன்
சென்னை: ராஜ்யசபா அதிமுக எம்.பி. என்.ஜோதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதிமுக வழக்கறிஞரான, ராஜ்யசபா எம்.பி. ஜோதி மீது, சென்னையைச் சேர்ந்த அமர்நாத் ராவ் என்ற வழக்கறிஞர் சிபிசிஐடியில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான பயணம் என்ற பெயரில் ஜோதி, மாநில அரசின் பணத்தில், பலமுறை டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். இந்த வகையில் அவர் பல லட்சம் ரூபாய் அரசுப் பணத்தை மோசடி செய்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான அரசு வழக்கறிஞர் குழுவில் ஜோதி ஒருபோதும் இடம் பெறவில்லை. எனவே காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான பயணம் என்ற பெயரில் அரசுப் பணத்தை ஜோதி மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் அமர்நாத் ராவ் கோரியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில், நவம்பர் 28ம் தேதி சிபிசிஐடி போலீஸார் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி ஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம் நேற்று ஜோதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான பயணம் என்ற பெயரில் ஜோதி டெல்லி சென்றதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று அரசுத் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ள தொகையான 10 லட்சத்து 27 ஆயிரத்து 417 ரூபாயை ஜோதி, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் 4 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும்.
ரூ. 25 ஆயிரம் தொகைக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். சிபிசிஐடி விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.