தண்டவளத்தில் மரம்: டிரைவரின் சாமர்த்தியத்தால் தென்காசி-புனலூர் ரயில் தப்பியது
தென்காசி: தண்டவளத்தில் மரங்கள் விழுந்ததை பார்த்த ரயில் டிரைவர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தியதால் 500 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.தென்காசியிலிருந்து காலை 6 மணிக்கு 500 பயணிகளுடன் புனலூருக்கு ரயில் சென்றது. காலை 7.10 மணியளவில் தென்மலை அருகே ரயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தை ஒட்டியுள்ள மிகப் பெரிய மரங்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்தன.
இதனை சற்றும் எதிர்பாராத ரயில் டிரைவர் காளிராஜ் துரித கதியில் செயல்பட்டு ரயிலை உடனே நிறுத்தினார். இதனால் ரயிலில் இருந்த 500க்கும் அதிகமான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து சென்ற மீட்பு பணியாளர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி மரதங்களை, பயணிகள் துணையோடு வெட்டி அப்புறப்படுத்தினர்.
அதன் பின்பு ஒன்றரை மணி நேரம் தாமதத்திற்கு பின் ரயில் புனலூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
ஏற்படவிருந்த பெரும் விபத்திலிருந்து ரயில் பயணிகளை காப்பாற்றிய டிரைவர் காளிராஜுக்கு தென்னக ரயில்வே கிளைத் தலைவர் கல்யாணி, செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.