பெண் என்ஜீனியர் சாவுக்கு இன்ஸ்பெக்டரின் செக்ஸ் கொடுமையே காரணம்!
தஞ்சாவூர்: தஞ்சையில் ஹோட்டலில் பெண் என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டதற்கு இன்ஸ்பெக்டரும், அவருடைய நண்பரும் செய்த செக்ஸ் கொடுமையே காரணம் என அந்தப் பெண் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (26). இவர் பண மோசடி வழக்கில் சிக்கினார். இவர் முன்னாள் எம்.பி ஒருவரின் பேத்தி ஆவார். இந்த வழக்கில் இவரது தந்தை உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விசாரணைக்காக கடந்த மாதம் 16ம் தேதி தஞ்சைக்கு வந்தார் அகிலாண்டேஸ்வரி. அவரை விசாரணைக்காக அழைத்து வந்த போலீஸார் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் 19ம் தேதி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் அகிலாண்டேஸ்வரி. விசாரணைக்காக வந்த இடத்தில் அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் போலீஸார் செய்த செக்ஸ் கொடுமைகளால்தான் அவர் இறந்திருக்க வேண்டும் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முதல்வர் அலுவலகத்திற்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமார் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அகிலாண்டேஸ்வரி சாவதற்கு முன்பு தனது தாயாருக்கு எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது. அதில் தனது சாவுக்கு யார் காரணம், என்ன நடந்தது என்பதை தெள்ளத் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் அகிலாண்டேஸ்வரி.
அக்கடிதத்தில், போலீஸாரின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. எனக்கு வாழவே பிடிக்கவில்லை. பணம் பறிப்பதில்தான் போலீஸார் குறியாக உள்ளனர். இன்று நாம் ரூ.7 லட்சம் கொடுக்க உள்ளோம்.
போலீஸார் செய்து வரும் செக்ஸ் சித்திரவதையை என்னால் தாங்க முடியவில்லை. சாவதைத் தவிர வேறு எனக்கு வழியில்லை.
எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். என்னை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இன்ஸ்பெக்டரும், அவருடன் வந்த அவரது நண்பரும்தான் எனது நிலைக்குக் காரணம்.
அம்மா, உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். எல்லோரையும் பார்க்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார் அகிலாண்டேஸ்வரி.
இந்த கடித நகலை திருச்சியில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில செயலாளர் பூஜா குமார் கூறுகையில், அகிலாண்டேசுவரியை போலீசார் கற்பழித்துள்ளனர். இது உண்மை.
அகிலாண்டேசுவரி உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், போலீசாரே தகனம் செய்துள்ளனர். இந்த வழக்கில் உண்மை மூடி மறைக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றார்.