மதுரையில் வாலிபர் கடத்தி கொலை
மதுரை: மதுரையில் காணாமல் போன வாலிபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராமசாமி மகன் காளிமுத்து (18). இவரை கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று அவரின் நண்பர்களான காந்தி, கண்ணன் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிமுத்து வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.
அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் கீரைத்துரை போலீசார் வழக்குப் பதிவு காளிமுத்து காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக கமுதியை அடுத்த கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் காளிமுத்துவை முன் விரோதம் காரணமாக கோவிந்தராஜ், ஈஸ்வரன், பூமி, குரு, வழிவிட்டான் சிவசுப்பிரமணியன், வீரபத்திரன், பல்லு ஈஸ்வரன் ஆகியோர் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.
அதன் பேரில் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
காணாமல் போன வாலிபரை கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.