ஆதி பராசக்தி படத்தில் பாம்பு - மக்கள் பரவசம்!
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிபராசக்தி சாமி படத்தில் பாம்பு உருவம் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் பரவசத்துடன் படத்தையும், பாம்பையும் பார்த்து வணங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ரோட்டில் வசித்து வரும் பாண்டியன்-ராணி தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இதற்காக வீட்டில் தனி பூஜையறை அமைத்து அதில் பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் அம்மனை வழிபடுவது போன்ற போட்டோவை வைத்துள்ளார்.
நேற்று முன் தினம் மாலை 6.45 மணியளவில் ராணி பூஜை செய்து கொண்டிருந்த போது அம்மன் போட்டோவில் திடீரென்று பாம்பு போன்ற உருவம் தோன்றியது. அதன் அருகில் திரிசூலமும், மஞ்சள் குலையும் போன்று காட்சியளித்தது. இதைப்பார்த்த ராணி ஆச்சரியம் அடைந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஆதிபராசக்தி மன்றத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் தலைவி மைதிலி மற்றும் மன்ற குழுவை சேர்ந்த பெண்கள் அங்கு வந்து பார்த்தனர். இந்த செய்தி காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவியது. இதை தொடர்ந்து பொது மக்கள் திரண்டு வந்து பார்த்து சென்றனர்.
இதுகுறித்து ராணி கூறும் போது, நாங்கள் கடந்த 10 வருடங்களாக மேல்மருவத்தூர் அம்மனை வீட்டில் வைத்து பூஜித்து வருகிறோம். ஞாயிற்றுகிழமை மாலை பூஜை செய்தபோது அந்த அற்புத காட்சி தோன்றியது. இதைப்பார்த்த நாங்கள் ஆனந்த அதிர்ச்சியடைந்தோம்.
3 நாட்களாக பாம்பு வடிவ காட்சி மறையாமல் அப்படியே இன்றுவரை உள்ளது. எங்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
இன்னும் சில நாட்கள் கழித்து நாங்கள் அந்த போட்டோவை மேல்மருவத்தூர் கோயிலுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். கடந்த 5 நாட்களுக்கு முன் என் சங்கரம்மாள் பூஜை அறையில் இருந்த மேல்மருவத்தூர் அம்மன் படத்தில் பாம்பு உருவம் தெரிவதாக கூறினார். ஆனால் நாங்கள் நம்பவில்லை. இப்போதுதான் அது உண்மை என தெரிய வருகிறது என்றார்.
அம்மன் படத்தில் பாம்பு உருவம் தெரியும் காட்சியை பார்ப்பதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆதிபராசக்தி மன்ற குழுவினர் ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.