இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு பயிற்சி வகுப்பு
ரியாத்: ஹஜ் பயணமாக வந்துள்ள இந்திய யாத்ரீகர்களுக்கு ஹஜ் பயணம் குறித்த பயிற்சி வகுப்பு மெக்காவில் நடந்தது. இந்த வகுப்பை இந்திய யாத்ரீகர்கள் நல அமைப்பு நடத்தியது.
மெக்காவில் உள்ள மான்சி டவர்ஸ் என்ற இடத்தில் நவம்பர் 29ம் தேதி நடந்த இந்த பயிற்சி வகுப்பில் 600க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்.
இரண்டு பகுதிகளாக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. முதல் பாதியில், ஹஜ் யாத்திரைக்குத் தயாராவது, பல்வேறு கட்டங்களில் செய்ய வேண்டிய சடங்குகள், செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து விளக்கப்பட்டது. இதுதொடர்பாக வீடியோ படம் போட்டுக் காட்டப்பட்டது.
2வது பாதியில், இந்திய அரசுசார்பில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்கள் கலந்து கொண்டு யாத்ரீகர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். ஹஜ் பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய உடல் நல குறிப்புகள் குறித்தும் அவர்கள் விளக்கினர்.
கடந்த 1997ம் ஆண்டு நடந்த மினா உயிரிழப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய யாத்ரீகர்கள் நல அமைப்பு உருவாக்கப்பட்டது. அன்று முதல் இந்திய யாத்ரீகர்களின் நலனுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது.
சவூதிக்கு யாத்திரைக்காக வரும் இந்திய யாத்ரீகர்களுக்குத் தேவைப்படும் பல்வேறு உதவிகளை, பணம், பொருட்களை இழப்பவர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை வழங்கி வருகிறது இந்த அமைப்பு.
இந்த சேவை தவிர யாத்ரீகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் கையேடுகளையும் இந்த அமைப்பு இந்திய யாத்ரீகர்களுக்கு வழங்குகிறது. இந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி, உருது, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் இவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமைப்பின் தலைவரான ஷபீர் படேல் கூறுகையில், இந்த ஆண்டுக்கான யாத்திரையின்போது, இதுவரை இந்திய யாத்ரீகர்களுக்காக 36 ஆயிரம் சவூதி ரியால்களை விநியோகித்துள்ளோம் என்றார் அவர்.
இந்த ஆண்டு இதுவரை 60 ஆயிரத்து 429 இந்தியர்கள் சவூதி வந்துள்ளனர். அவர்களில் 51 ஆயிரத்து 122 பேர் மெக்காவிலும், 9 ஆயிரத்து 293 பேர் மதீனாவிலும் தங்கியுள்ளனர்.