ரேபரேலி கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
ரேபரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்ட நீதிமன்ற வாயிலில் 5 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இன்று கண்டெடுக்கப்பட்டதால் பீதி நிலவுகிறது.
கடந்த நவம்பர் 23ம் தேதி லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60பேர் படுகாயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் இந்த சதிகார செயலைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தியது. இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நீதிமன்றத்தின் பிரதான வாயில் அருகே அநாதையாக ஒரு சைக்கிள்
நின்று கொண்டிருந்தது.
அதில் கட்டி வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் சோதனையிட்டபோது அதில் சக்தி வாய்ந்த 5 வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.