ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ் - ஜெயா டிவியின் புதிய சானல்கள் உதயம்
ஜெயலலிதாவின் முழு ஆசியுடன், அவரது முழு ஆதரவுடன் 1999ம் ஆண்டு ஜெயா டிவி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அந்த சேனலிலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
முழு நேர செய்தி சேனலான ஜெயா பிளஸ் மற்றும் பொழுதுபோக்குச் சானலான ஜெயா மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரு சானல்களும் இன்று முதல் முழு நேர ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன.
ஜெயா பிளஸ் சானலுக்கு தயாநிதி மாறன் மத்தியில் அமைச்சராக இருந்தபோது, அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக முன்பு ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு ஜெயா பிளஸ் டிவிக்கான உரிமத்தை வழங்கியது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயா பிளஸ் சானல் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பைத் தொடங்கியது. இன்று முதல் முழுமையான, முறையான ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.
ஜெயா டிவி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் ஆகிய இரு சானல்களின் ஒளிபரப்பையும் இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பின்னர் ஜெயலலிதா பேசுகையில், ஜெயா டிவிக்கு வழங்கப்பட்ட அதே ஆதரவை புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் சானல்களுக்கும் வழங்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.