வாகனங்களுக்கான விதிமுறையில் பாரபட்சம் - சரத்குமார் எதிர்ப்பு
சென்னை: தமிழக அரசு சுற்றுலா வாகனங்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுவதும், தனித்தனி விதிமுறைகளை அமல்படுத்துவதும் முற்றிலும் தவறானது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா வாகனங்களுக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் பர்மிட் நீட்டிப்பு இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவு சுற்றுலாத் தொழிலை பாதிக்கும். தமிழகத்தில் சுமார் 95 லட்சம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓடும்போது, 75,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் 7 ஆண்டு வரம்பு விதிப்பது எப்படி நியாயமாகும்.
அரசு பேருந்துகள், மாநகராட்சி லாரிகள் மற்றும் இதர அரசு வாகனங்கள் எத்தனையோ ஆண்டுகளை கடந்த பின்னரும் சாலையில் ஓடுவதற்கு அனுமதி அளிக்கலாமா போன்ற கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
சுற்றுலா வாகனங்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுவதும் தனித்தனி விதிமுறைகளை அமல்படுத்துவதும் முற்றிலும் தவறானதாகும்.
எனவே, இத்துறையில் தொடர்புடைய அனைவருடைய யோசனைகளையும் கேட்டறிந்த பின்னரே அரசு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.