நுழைவுக் கட்டணம் உயர்வு: கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டதால் வியாபாரிகள் இன்று அதிகாலை சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை ஆட்டோ, மினிடோர் வாகனங்களுக்கு ரூ.10ம் வேன்களுக்கு ரூ.20ம், சரக்கு லாரிகளுக்கு
ரூ.110ம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் இந்த கட்டணங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென்று உயர்த்தப்பட்டது. அதன்படி ஆட்டோ, வேன் மற்றும் லாரிகளுக்கு முறையே ரூ.25, ரூ.45 மற்றும் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று அதிகாலையில் காய்கறிகள் வந்த சரக்கு வாகனங்கள் மார்க்கெட் வளாகத்திற்கு செல்லாமல் ரோட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆதிமூர்த்தி தலைமை தாங்கினார்.
போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா. வெள்ளையன் உட்பட நிர்வாகிகள் அங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். மார்க்கெட்டுக்குள் நுழைவு
கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வியாபாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.
அதன் பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கட்டண உயர்வை கைவிடுவதாக அறிவித்ததும் அனைத்து வாகனங்களும் மார்க்கெட்டிற்குள் சென்றது.
இது தொடர்பாக வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கூறுகையில்,
நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் எங்கள் எதிர்ப்பை மீறி அரசு கட்டண வசூலித்தது. தற்போது இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளனர்.
இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. இதை கைவிடா விட்டால் வியாபாரிகளின் அடுத்த கட்ட போராட்டம் நடக்கும் என்றார் வெள்ளையன்.