இனவெறியுடன் நான் நடந்து கொள்ளவில்லை - மலேசிய பிரதமர்
கோலாலம்பூர்: எனது அமைச்சரவையில் பாதிப் பேர் மலாய் மற்றும் முஸ்லீம் அல்லாத இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நான் இனப் பாகுபாடு காட்டுவதாக கூறுவது தவறானது என்று மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது அமைச்சரவையில் பாதிப் பேர் மலாய் இனத்தவரோ அல்லது முஸ்லீம் சமுதாயத்தினரோ அல்ல. எனவே நான் இன வெறியுடன், மத வெறியுடன் நடப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.
முன்பு நான் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் மலேசியாவின் அமைப்பு குறித்து உலக நாடுகள் சரியாக புரிந்து கொள்ளாத நிலையை உணர முடிந்தது. மேலும் மலேசிய அரசியல் குறித்தும் தவறான கருத்து வெளிநாடுகளில் நிலவுவதையும் அறிய முடிந்தது.
மலேசிய ஆளுங்கட்சியின் அதிகாரப் பகிர்வு குறித்த முழுமையான, உண்மையான நிலையை உலக நாடுகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை. இதற்கு முக்கியக் காரணம் அப்படிப்பட்ட அரசியல், அதிகார அமைப்புகள் அந்த நாடுகளில் இல்லாததே.
தங்களது குறைகளை விளக்கும் முகமாக பேரணி நடத்தப் போவதாக நவம்பர் 15ம் தேதி இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு அறிவித்தது. ஆனால் அது சட்ட விரோதம் என அரசு எச்சரித்தது. ஆனால் அதையும் மீறி அவர்கள் பேரணியை நடத்தினர். இதுதொடர்பாக 31 பேரை கைது செய்துள்ளோம்.
நாங்கள் இனப்படுகொலை செய்வதாக இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டுகிறது. இது மிகவும் தவறானது. எனது அமைச்சரவையைப் பாருங்கள். அதில் பாதிப் பேர் மலாய் இனத்தவர்கள் கிடையாது, முஸ்லீம்கள் கிடையாது, ஆளும் ஐக்கிய மலாய் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது.
ஒரு நாடு பிரச்சினையை சந்திக்கும்போது யாருக்கும் வெற்றியும் கிடைக்காது, தோல்வியும் கிடைக்காது. மாறாக அந்த நாடு முழுமையும் பாதிப்படையும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனால்தான் நாட்டை அமைதியாக வைத்திருக்க சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிட்டது.
மலாய் இனத்தவர்களுக்கும், மற்ற இனத்தவர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. அது கெட்டுப் போக நாங்கள் விரும்பவில்லை. அது தொடர வேண்டும், அனைவரும் இணக்கமாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம் என்றார் படாவி.