சபரிமலையில் நெரிசல் - பலர் காயம்
கொல்லம்: சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் தொடங்கிய இத்தனை நாட்களில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
பதினெட்டாம் படியில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் தள்ளிக் கொண்டு விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தள்ளுமுள்ளில் ஒரு மூதாட்டி உள்பட பலர் காயமடைந்தனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக சன்னிதானத்தில் உள்ள மருத்துவனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கள்ள மார்க்கெட்டில் அரவணை விற்பனை:
இதற்கிடையே, பக்தர்கள் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் கோவில் நிர்வாகம் அரவணை பிரசாதம் வழங்குவதிலும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. ஒரு பக்தருக்கு ரூ. 40 வீதம், அதிகபட்சம் 2 டின்கள் மட்டும் வழங்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவு இருப்பதால் அரவணை செய்து கொடுக்க முடியவில்லை என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் பக்தர்கள் அரவணைப் பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் சில புரோக்கர்கள் மூலமாக கள்ளச் சந்தையில் விற்று வருவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.
சில புரோக்கர்கள் ஏராளமான அரவணை டின்களை வாங்கி வைத்துக் கொண்டு ரூ.40க்கு விற்கும் அரவணை பிரசாதத்தை ரூ.180 வரை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த இடைத்தரகர்களுக்கு தேவசம் போர்டு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால் புகார் செய்தும் பலனில்லாமல் பக்தர்கள் திண்டாடி வருகின்றனர்.