சலாகுதீனுக்கு மத்திய கிழக்கின் சிறந்த சாதனையாளர் விருது
அபுதாபி: மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றிய ஆசிய சாதனையாளராக (Outstanding Asian contribution to the Middle East Development) ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பிரபலமான ஈடிஏ அஸ்கான், ஈடிஏ ஸ்டார் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் சையது முஹம்மது சலாகுதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ஏசியன் பிஸினஸ் அவார்ட்-மிடில் ஈஸ்ட் நிறுவனமும், அமெரிக்காவின் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூபர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த விருத்துக்கான போட்டியை நடத்தின. இதில் சலாகுதீன் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னணி நிறுவனங்களின் தலைவர்களின மதிப்பீடு, பொது மக்கள் வாக்களிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு எமிரேஸ்ட்ஸ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அபுதாபி வர்த்தக கவுன்சிலின் தலைவரான அமைச்சர் சாலிம் அல்-சம்சி இந்த விருதுக் கோப்பையை சலாகுதீனுக்கு வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் அமீரக அமைச்சர்கள், இந்தியத் தூதர் தன்சீம் அகமத், துணைத் தூதரக அதிகாரியான கவுன்சுலேட் ஜெனரல் வேலு, தொழிலபதிபர் லட்சுமி மிட்டல், இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றனர்.
20 நாடுகளில் சுமார் 70,000 தொழிலாளர்களைக் கொண்ட (இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே) நிறுவனங்களை நடத்தி வரும் சலாகுதீன், தமிழகத்தில் கீழக்கரையில் கண்ணியம் மிக்க, பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பொறியியல் நிர்வாகத்துறை கழகத்தின் தலைவரும் தொழில்துறை நிர்வாகியுமான எம்ஜேஎம் இக்பால் கூறுகையில், சிறந்த மனிதாபிமானியான சையத் சலாகுதீன் தனது கடும் முயற்சியாலும், தொழில் திறமையாலும் இந்த உயரத்தை எட்டிப் பிடித்துள்ளார். பெற்றோரிடம் நற்குணங்களைக் கற்றவர்.
கட்டுமானம், பொறியியல், தொழில்துறை, கப்பல்துறை, கார்கள், தயாரிப்புத்துறை, சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம் என எல்லா துறைகளிலும் கால் பதித்துள்ள சலாகுதீன் இந்திய-அரேபிய நாடுகளுக்கு இடையே நட்புறவுப் பாலமாகவும் திகழ்ந்து வருகிறார் என்றார்.
வளைகுடாவில் ஆயிரக்கணக்கான பொறியாளர்களை கொண்ட நிறுவனங்களை நடத்தி வரும் சலாஹூதீன் நேற்று தனது விருதைப் பெறும்போது அதை தனது பெற்றோர் பாத்திமா, ஹமீத், தனது முன்னோர், தனது தொழிலாளர்களுக்கு சமர்பிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய, அரேபிய, மேற்கத்திய நாடுகளின் தொழில்துறையினரும் பங்கேற்றனர்.
விருதை வென்ற சலாஹூதீனுக்கு இந்தியா, வளைகுடா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நிறுவனங்களின் அதிபர்கள், முக்கியஸ்தர்கள், சமூக நல அமைப்புகளிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சையத் சலாஹூதீனின் வளர்ச்சிக்கும் பொது நலப் பணிகளுக்கும் உறுதுணையாய் இருப்பது அவரது மனைவி நஜ்மா சலாஹூதீன் என்பது குறிப்பிடத்தக்கது.