மலேசியாவில் பேரணி: மனித உரிமை அமைப்பினர் 8 பேர் கைது
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதுக்கு முன்பாக பெரும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
உலக மனித உரிமை தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோலாலம்பூரில் மனித உரிமை அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் சார்பில் இன்று உலக அமைதிப் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் நடந்த தமிழர்கள் பேரணி வன்முறையில் முடிந்ததைக் காரணம் காட்டி இதற்கு அனுமதி கொடுக்க மலேசிய காவல்துறை மறுத்து விட்டது.
இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று காலை 7.30 மஇக்கு கோலாலம்பூர் சிட்டி சென்டர் முன்பு வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கூடி பேரணியாக செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களை செல்ல விடாமல் போலீஸார் தடுத்தனர். இதையடுத்து போலீஸாருக்கும், பேரணிக்கு வந்திருந்தவர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இதையடுத்து வக்கீல்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் செ ஹம்ஸா செ இஸ்மாயில் கூறுகையில், இந்தப் பேரணிக்கு அனுமதி தரப்படவில்லை. தடையை மீறி பேரணி நடத்த முயன்றதால் 8 பேரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.
முன்னதாக பேரணிக்கு வந்திருந்தவர்கள் பேச்சுரிமைக்கு தடை விதிக்கப்படுவதைக் கண்டித்து முகமூடி அணிந்து வந்திருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு மலேசிய வக்கீல்கள் சங்கத் தலைவர் அம்பிகா சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அமைதியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி. இதை போலீஸார் தடுத்தது ஏன் என்று புரியவில்லை. காவல்துறையின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அவர் சென்றபோது உள்ளே விட போலீஸார் மறுத்து விட்டனர்.
கடந்த மாதம் 25ம் தேதி நடந்த தமிழர்கள் பேரணியின்போது பெரும் வன்முறை ஏற்பட்டதால் இன்றைய பேரணியின்போது பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.