நெல்லை மாநாடு-பேரணியை முதல்வர் பார்வையிட திருவாரூர் தேர் வடிவ மேடை
நெல்லை: நெல்லையில் நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டு பேரணியை முதல்வர் கருணாநிதி பார்வையிட திருவாரூர் தேர் வடிவில் பிரத்தியேக மேடை அமைக்கப்படுகிறது.
நெல்லையில் வரும் 15,16 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக கடந்த 2 மாதங்களாக இரவு, பகலாக பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விழாத் தலைவர்கள் அமரும் மேடை முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
மேடைக்கு அருகிலேயே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஓய்வெடுக்க தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு பந்தலின் வெளியே கோட்டைச் சுவர் போல உள்ள அலங்காரம் பிரம்மிக்க வைக்கிறது.
இந்த மாநாட்டை தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடக்கிறது. இவர்கள் அனைவரும் வெள்ளை சீருடை அணிந்து செல்வது தான் பேரணியின் சிறப்பாகும்.
வ.உ.சி மைதானத்திலிருந்து துவங்கும் இந்த பேரணி பாளை பேருந்து நிலையம், பெரியார் சிலை, ஐகிரவுண்ட் ரோடு வழியாக சென்று மகாராஜநகர் ரவுண்டானாவை அடைகிறது.
இந்த பேரணியை முதல்வர் பார்வையிடுவதற்காக அவருக்காக பிரத்தியேகமாக திருவாரூர் தேர் வடிவில் தனி மேடை தயாராகி வருகிறது.
சிறப்பு விரைவுப் படை வந்தது:
திமுக இளைஞரணி மாநாட்டு பாதுகாப்புக்காக கோவையில் இருந்து சிறப்பு விரைவு படையினர் நெல்லை வந்துள்ளனர். தமிழக டி.ஐ.ஜி ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி விஜயகுமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாநாட்டு பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல்கட்டமாக கோவையில் இருந்து வந்த சிறப்பு விரைவு படை போலீசார் மாநாட்டு பந்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாநாட்டு பந்தலை பார்க்க குவிந்த மக்கள்:
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலைக் காண நெல்லை மாநகர மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து போன வண்ணம் உள்ளனர்.
மாநாட்டு பந்தலுக்குள் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேலைப்பாடும் கலைநயத்துடன் உள்ளன.