மோசடியில் ஈடுபட்ட ஹோட்டல் அதிபர் தலைமறைவு
மதுரை: மதுரையில் மோசடியில் ஈடுபட்ட ஹோட்டல் அதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் அடைக்கலம். இவர் துபாய் செல்ல மதுரையில் உள்ள டிராவல் ஏஜென்ஸி நடத்தும் விஜயன், சங்கரலிங்கம் ஆகியோரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன் பணம் ரூ.75,000 கொடுத்துள்ளார்.
விஜயனும், சங்கரலிங்கமும் மதுரை பெரியார் பஸ் நிலையம் மேல பெருமாள் கோவில் மேஸ்திரி தெருவில் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வரும் சுவான் என்பவரிடம் பாஸ்போர்ட் பெற பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால், சுவான் பாஸ்போர்ட்டும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
இந் நிலையில் அடைக்கலம் மதுரை நீதிமன்றத்தில் தனக்கு பாஸ்போர்ட் பெற்று தருவதாக கூறி சுவான், விஜயன், சங்கரலிங்கம் ஆகியோர் ரூ.75,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருவதாக வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடைக்கலத்தின் மனுவை ஏற்றுக் கொண்டு சுவான், விஜயன், சங்கரலிங்கம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து வழக்குப் பதிவு போலீசார் சுவானை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விஜயன், சங்கரலிங்கம் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதில் விஜயன் என்பவர் மதுரையில் உள்ள பிரபல ஹோட்டலின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.