3 அதிமுக எம்.எல்.ஏக்கள் சரண் - நிபந்தனை முன் ஜாமீன்
கோவை: பொங்கலூரில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் இல்ல காவலாளியை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் உள்பட 44 பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்து நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனர்.
கடந்த மாதம் கோவை மாவட்டம் பொங்கலூரில் குடிநீர் விநியோக முறைகேடுகளைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் பொங்கலூரில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான விருந்தினர் இல்லத்திற்குச் சென்று அறை கேட்டனர்.
ஆனால் காவலாளி சுப்ரமணியம், அறை எதுவும் காலியாக இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் செ.ம. வேலுச்சாமி, தாமோதரன், எம்.எல்.ஏ வேலுமணி உள்ளிட்டோர் காவலாளியைத் தாக்கி ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக போலீஸில் காவலாளி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் 50க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 18 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம.வேலுச்சாமி, வேலுமணி, தாமோதரன் உள்ளிட்ட 44 பேர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், கோவையில் உள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன், வேலுச்சாமி, வேலுமணி, தாமோதரன் உள்ளிட்ட 44 பேரும் கோவை மாவட்ட பொறுப்பு நீதிபதி ராஜசேகரன் முன்பு சரணடைந்தனர்.
அவர்களில் ஜெயராமன், வேலுச்சாமி, வேலுமணி ஆகியோருக்கு வாரம்தோறும் திங்கள்கிழமை கோவை 6வது நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றவர்கள் பல்லடம் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.