சொராபுதீன்: மோடிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: போலி எண்கெளன்டரில் சொராபுதீன் சுட்டுக் ெகால்லப்பட்டதை ஆதரித்துப் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சூரத் நகரில் மாங்க்ரோல் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, போலி என்கவுண்டரில் அப்பாவி இளைஞர் சொராபுதீன் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தினார்.
சொராபுதீன் போன்ற தீவிரவாதிகளை என்ன செய்வது என்று மோடி கேட்க, கூடியிருந்தவர்கள் கொல்லுங்கள், கொல்லுங்கள் என்று கோஷமிட்டனர். நான் அதைத் தான் செய்தேன், சொராபுதீனுக்குக் கிடைத்த தண்டனை சரியானதுதான் என்றார் மோடி.
இதையடுத்து மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அனுப்பிய மோடி, தான் அவ்வாறு பேசவே இல்லை என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு இவ்வாறு பேசிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, தல்வீர் பண்டாரி ஆகியோர் இன்று மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
சொராபுதீன் கொல்லப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் இந்தக் கொலையை ஆதரித்துப் பேசினார் முதல்வர் மோடி.