ஆலடி அருணா 'புகழ்' எஸ்.ஏ.ராஜா மீது குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்
வள்ளியூர்: ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜாஸ் கல்வி நிலையங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜாவையும் அவரது மனைவியையும் வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் ராஜாஸ் கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர் எஸ்.ஏ.ராஜா. இவர் வடக்கன்குளம், காவல்கிணறு, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் நடத்தி வருகிறார்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா படுகொலையில் ராஜா மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கொலையில் கைது ெசய்யப்பட்ட ராஜா ஜாமீனின் வெளியில் திரிந்து வருகிறார்.
இந் நிலையில் இன்று காலை ராஜாவும், அவரது மனைவி சோபியாவும் வள்ளியூரில் உள்ள ஆலயத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது 2 அம்பாசிடர் கார்களில் வந்த நபர்கள் ராஜாவின் கார் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் ராஜாவின் கார் டிரைவர் பலத்த காயமடைந்தார். ராஜாவும் அவரது மனைவியும் தப்பிவிட்டனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த டிரைவரை நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே குண்டு வீசிய நபர்கள் சென்ற கார்களைப் பிடிக்க போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அந்தக் காரை சில போலீசார் பைக்குகளில் பின் தொடர்ந்து பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை.
ஆலடி அருணா கொலை வழக்கில் ராஜா மீதான தீர்ப்பு வர உள்ள நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.