கிழக்கு கடற்கரை சாலை-வசூல் மழையில் போக்குவரத்து போலீசார்
சென்னை: கிழக்குக் கடற்கரைச் சாலையில் போலீசார் அபராதம் என்ற பெயரில் ரசீதே தராமல் பண வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
சென்னை நீலாங்கரையை அடுத்த உத்தண்டி, முட்டுக்காடு போன்ற கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால், இப்போதெல்லாம் காட்டுப் பகுதியில் நின்று கொண்டு இரு சக்கர வாகனங்களில் வருவோரை வழி மறித்து பணம் பறிக்க ஆரம்பித்துவிட்டனராம் போலீசார்.
மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் ஆவணங்களை காட்டினாலும் மிக வேகமாக வண்டியை ஓட்டியதாக சொல்லி பணம் வசூல் செய்கின்றனராம். ரூ. 1,500 வரை அபராதம் போடும் போலீசார் அதற்கு ரசீது கொடுப்பதில்லை என்பது தான் முக்கியமான விஷயம்.
குறிப்பாக ஜோடியாக யாராவது வந்துவிட்டால், வசூல் கெடுபிடி மிக அதிகமாகிவிடுகிறது. காதல் ஜோடிகளின் பைக்குகளின் சாவியை பிடுங்கி வைத்துக் கொண்டு அபராதம் பணம் கேட்பது, அவர்கள் பயந்து போய் பணத்தைத் தந்தால் அதை வாங்கிக் கொண்டு ரசீது தராம் அனுப்புவது என வசூல் கொடி கட்டிப் பறக்கிறது.
ரசீது இல்லாமல் வசூலிக்கப்படும் இந்தப் பணம் அரசுக்கோ, நீதிமன்றத்துக்கோ அபராதமாக போய்ச் சேருகிறதா என்பது சந்தேகமே.