போதையில் கத்தியால் குத்திய ஏட்டு-மண்டையை உடைத்த வாலிபர்கள்
திருத்துறைப்பூண்டி: டாஸ்மாக் மதுக்கடையில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தினார் போதையில் இருந்த போலீஸ் ஏட்டு. பதிலுக்கு அந்த இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஏட்டையாவின் மண்டையை உடைத்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்-வேதாரண்யம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மருதாச்சலம், முருகானந்தம், வீரமணி ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அருகில் முத்துப்பேட்டை காவல் நிலைய ஏட்டையா அமிர்தலிங்கம் என்பவரும் குடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது போலீஸ் ஏட்டுக்கும் அந்த 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏட்டு அமிர்தலிங்கம் கத்தியால் மருதாச்சலத்தை குத்தினார்.
இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில் தனது நண்பருடன் ஏட்டு அமிர்தலிங்கம் சாலையில் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மருதாச்சலம், முருகானந்தம், வீரமணி மற்றும் இன்னொரு நபர் கட்டைகளால் ஏட்டையாவை தாக்கினர்.
இதில் அவரது மண்டை உடைந்தது. இதில் படுகாயமடைந்த ஏட்டு அமிர்தலிங்கம் திருத்துறைப்பூண்டியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இரு தரப்பினரும் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தார்.