புலிகளால் அச்சுறுத்தல் இல்லை-தென் பிராந்திய ராணுவ தளபதி
சென்னை: தமிழகத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நோபிள் தம்புராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது
ராணுவத்தில் 12,000 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது கவலை அளிக்கும் விஷயம். இந்த பணியிடங்களுக்காக நிறைய விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் இல்லாத காரணத்தால் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
பொறியியல் கல்லூரிகளில் ராணுவ படிப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்க சொல்லியுள்ளோம். பட்டதாரி மாணவ-மாணவிகள் ராணுவத்தில் சேருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே இதை தமிழக மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு ராணுவத்தில் சேரவேண்டும்.
இலங்கையில் இருந்து அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருவதால் கடலோர காவல்படையும், கப்பல் படையும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இலங்கை-இந்தியா கூட்டு ரோந்துக்கான வாய்ப்பு இல்லை.
விடுதலைப் புலிகள் விவகாரம் அரசியல் விவகாரமாகிவிட்டது. புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவாமல் இருக்க கடலோர காவல் படையும் கப்பல் படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
புலிகளால் தமிழகத்துக்கு தற்போது அச்சுறுத்தல் ஏதும் இல்லை. வெளிநாட்டை விட உள்நாட்டு தீவிரவாத இயக்கங்களால் தான் அதிக அச்சுறுத்தல் உள்ளது. இதை சமாளிக்க அந்தந்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
வேலூரில் ராணுவப் பள்ளி ஆரம்பிக்க முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.