மாமூல் வசூல்-எஸ்ஐ, போலீசார் அதிரடி மாற்றம்!
மதுரை: மதுரையில் வாகனங்களை நிறுத்தி மாமூல் வசூலித்த எஸ்.ஐ, மற்றும் போலீசார் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கொட்டாம்பட்டி டயத்புரம் அருகில், மேலூர் கோவில் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பஞ்சர்வணம் மற்றும் 6 போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் காசு வசூல் செய்து கொண்டிருந்தனர்.
இவர்களது வசூல் ஆர்வம் அதிகமானதால் ஒரு வாகனமும் தப்பவில்லை. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த வழியே ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் உறவினர்கள் சிலர் வாகனத்தில் மதுரை நோக்கி வந்துள்ளார். அந்த வாகனத்தையும் வழி மறித்த எஸ்.ஐ. பஞ்சர்வணம் மற்றும் போலீசார் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் மதுரை எஸ்பி அன்புக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய எஸ்பி இந்த போலீசார் மற்றும் எஸ்ஐ அனைவரையும் மதுரை புறநகர் ஆயுதபடை பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அதிகாரியின் சொந்தக்காரர்கள் புகார் கொடுத்ததால் இந்த புயல் நடவடிக்கை எடுத்துள்ளார் எஸ்பி. அதுவே சாதாரணர்கள் புகார் கொடுத்தாலும் செய்வாரா?