திமுக மாநாட்டுக்கு தனியார் பஸ்களை விட தடை கோரி அதிமுக வழக்கு
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தாக்கல் செய்த பொது நலன் மனுவில், நெல்லையில் வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு வரும் ஆளுங்கட்சியினரின் வசதிக்காக தனியார் பேருந்துகளை நெல்லைக்கு அனுப்புமாறு மாநில அரசும், திமுகவினரும் தனியார் பேருந்து உரிமையாளர்களை வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். டிசம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும். மேலும் பல்வேறு கோவில்களில் மத விழாக்களும் நடைபெறும்.
நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி ஏற்கனவே அதிமுக இளைஞர் அணி செயலாளர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், 10 நிபந்தனைகளை விதித்து மாநாட்டுக்கு அனுமதி அளித்தது.
ஆனால் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறும் வகையில், பேனர்கள் கட்டுவதும், வரவேற்பு வளைவுள் வைப்பதும் நெல்லையில் நடந்து வருகிறது. இதுபோன்று மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வைக்கக் கூடாது என்று திமுக அரசே தடை விதித்துள்ளது. ஆனால் அவர்களே தடையை மீறி நடந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களை திமுகவினர் மிரட்டி, தங்களது தொண்டர்கள் நெல்லைக்குச் செல்வதற்காக பேருந்துகளை அனுப்ப வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்டு வழித்தடங்களில் மட்டுமே தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும். அப்போதுதான் அந்த வழித்தடங்களில் வரும் தனியார் பேருந்துகளை நம்பியிருக்கும் பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
எனவே தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களைத் தவிர வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கபடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில உள்துறைச் செயலாளர், போக்குவரத்துத் துறைச் செயலாளர், போக்குவரத்து ஆணையர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும் டிசம்பர் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நெல்லை திமுக இளைஞரணி மாநாட்டால், தனியார் பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
இந்த மனு இன்று முதலாவது பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.