பெங்களூர் டெஸ்ட் டிரா ஆனது - தொடரை வென்றது இந்தியா
பெங்களூர்: பெங்களூரில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்தத் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அபாரமாக பேட் செய்து 626 ரன்களைக் குவித்தது. கங்குலி டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தார். மேலும், யுவராஜ் சிங், இர்பான் பதான் ஆகியோரும் சதம் அடித்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக ஆடி, 537 ரன்களை எடுத்து பாலோ ஆனைத் தவிர்த்தது. மிஸ்பா உல் ஹக் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 284 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கங்குலி 91 ரன்கள் எடுத்தார். 9 ரன்களில் சதத்தைத் தவற விட்டார். முதல் இரு போட்டிகளிலும் சோபிக்காத திணேஷ் கார்த்திக் 52 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் தனது பேட்டிங்கைத் தொடங்கியது.
பாகிஸ்தான் நிதான ஆட்டத்தைக் காட்டினாலும், நல்ல இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழ ஆரம்பித்தன. இதனால் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. முன்னணி வீரர்களான பட் (8), யூனிஸ் கான் (0), கம்ரான் அக்மல் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
மிஸ்பா உல் ஹக் 37 ரன்கள் எடுத்தார். இக்பால் 51 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் 162 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது பாகிஸ்தான். இன்னும் கிட்டத்தட்ட 13 ஓவர்கள் விளையாட வேண்டியிருந்த நிலையில் வெளிச்சம் போதவில்லை என்று கூறி ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றியின் விளிம்பு வரை சென்ற இந்தியாவுக்கு அதை பெற முடியாமல் போனது. இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருந்த காரணத்தால் 3 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
ஆட்ட நாயகனாக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது.