விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட டீக்கடைக்காரர் மர்ம சாவு
சென்னை: சென்னையில், போலி லாட்டரிச் சீட்டு விற்றது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கேரளாவைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தார். இதனால் போலீஸார் மீது மலையாளிகள் சங்கம் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனிடம் புகார் கொடுத்துள்ளது.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் டீக் கடை நடத்தி வந்தவர் செய்யது அலாவி (55). இவர் கேரள மாநிலம் பரப்பணங்காடி பகுதியைச் ேசர்ந்தவர். பல ஆண்டுகளாக சென்னையில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை வடபழனி போலீஸார் அலாவியின் டீக்கடையில் சோதனையிட்டனர். பின்னர் அலாவி மற்றும் டீக்கடை ஊழியர் அந்தோணி ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அலாவி சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக அவரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அந்தோணியே கொண்டு சென்றார். ஆனால் அலாவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தோணி உடலை விட்டு விட்டு வந்து சக டீக்கடைக்காரர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து வடபழனியைச் சேர்ந்த கேரளாவைச் சேர்ந்த டீக்கடைக்கார்கள் வடபழனி காவல் நிலையத்திற்கும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கும் விரைந்தனர். மலபார் முஸ்லீம் சங்கத்தினரும், தமுமுகவினரும் விரைந்து வந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆணையர் விஜயராகவன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம சாவு என்ற சட்டப் பிரிவின் கீழ் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது தந்தையை போலீஸார் அடித்து இழுத்துச் சென்றதாகவும், அதனால்தான் அவர் இறந்து விட்டார் என்றும் அலாவியின் மகன் சம்ஷத் கூறியுள்ளார்.
இந்த சாவு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனிடம் மலபார் முஸ்லீம்கள் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அலாவி மரணத்திதற்கு இரங்கல் தெரிவித்தும், காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வடபழனியில் சிறிது நேரம் கடைகள் மூடப்பட்டன.