ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைச் சோதனையில் இந்தியா தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஏவி பரிசோதிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மீண்டும் ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் ஏவுகணையின் தாக்கும் தன்மை குறித்து இந்திய விமானப்படைக்கு திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து அதில் உள்ள ஓரிரு குறைபாடுகளை சரி செய்து மீண்டும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி ஒரிஸ்ஸா மாநிலம் பாலசோரில் உள்ள மொபைல் லாஞ்சரிலிருந்து நேற்று ஆகாஷ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5.6 மீட்டர் நீளமும், 700 கிலோ எடையும் கொண்ட ஆகாஷ் ஏவுகணை, 25 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும். 50 கிலோ எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் தன்மை படைத்தது.
அடுத்த பத்து நாட்களுக்கு ஆகாஷ் ஏவுகணை தொடர்ந்து பரிசோதிக்கப்படும். அதன் பின்னர் விமானப்படையில் இது சேர்க்கப்படும்.