இலங்கை அரசுக்கு முஸ்லீம் காங். ஆதரவு வாபஸ்!
இலங்கையில், சுதந்திராக் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ். இக்கட்சிக்கு 10 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்ளாக உள்ளனர்.
இந்த நிலையில் ஆளுங்கட்சிக் கூட்டணியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதன்கிழமை வெளியேறியது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவுப்பு வெளியிட்டார். மேலும், தனது கட்சியைச் ேசர்ந்த ஹசன் அலி, பசீர் சேகுதாவூத், பைசல் காசீம் ஆகியோர் சகிதம் எதிர்க்கட்சி அணியில் இணைந்தார்.
இதன் காரணமாக இலங்கை அரசுக்கு பெரும்பான்மை பலம் போய் விட்டது. இந்த நிலையில் இன்று இலங்கை அரசின் பட்ஜெட் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக முஸ்லீம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதைப் போலவே ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பட்ஜெட்டை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். இதனால் பட்ஜெட் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு கவிழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து விட அதிபர் ராஜபக்சே தீர்மானித்துள்ளார். பட்ஜெட் தோற்றால் உடனடியாக இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் எம்.பி.க்களின் உறவினர்கள் கடத்தல்:
இதற்கிடையே, தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்களின் உறவினர்கள் 3 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபக்சேவும், சபாநாயகரும்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து இந்த மூன்று பேரும் கடத்தப்பட்டுள்ளனர். பட்ஜெட் மீதான விவாதத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கவே இவ்வாறு அவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2 ஆம் விவாதம் மீதான வாக்கெடுப்பிற்கு முதல் நாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மருமகன் கடத்திச் செல்லப்பட்டார்.
அரசுக்கெதிராக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக்கூடாதென மிரட்டியே கனகசபை எம்.பி.யின் மருமகனைக் கடத்திய ஆயுதக் குழு கனகசபை எம்.பி. வாக்கெடுப்பு நடைபெற்ற நாளில் பாராளுமன்றம் செல்லாததால் அன்று மாலையே மருமகனை விடுவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மிக முக்கிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான பா.அரியநேத்திரன் எஸ்.ஜெயானந்தமூர்த்தி மற்றும் தங்கேஸ்வரியின் மிக நெருங்கிய உறவினர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பிலிருந்து ஆயுதம் தாங்கிய குழுவால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டவர்கள்: அரியநேத்திரன் எம்.பி.யின் சகோதரரும் கிராம சேவகருமான பா.ஸ்ரீகாந்தராசா (52), ஜெயானந்தமூர்த்தியின் மருமகனும் தபாலக ஊழியருமான அருணாசலம் சிவபாலன், தங்கேஸ்வரி எம்.பி.யின் செயலாளர் இரா. நாகலிங்கம் (65).
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பில் 3 தமிழ் எம்.பி.க்களும் அரசுக்கெதிராக வாக்களித்தால் கடத்தப்பட்ட மூவரும் கொல்லப்படுவார்கள் என அவர்களது வீடுகளுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, பா.அரியநேத்திரன், எஸ்.ஜெயானந்த மூர்த்தி உட்பட ஏழு தமிழ் எம்.பி.க்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.