உயர்நீதிமன்ற நீதிபதியுடன் அதிமுக வக்கீல் ஜோதி மோதல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரத்தை, அதிமுக சட்ட ஆலோசகரும், ராஜ்யசபா எம்.பியுமான என்.ஜோதி பெயர் சொல்லி அழைத்து கடுமையாக வாதிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோபமடைந்த நீதிபதி, வழக்கை ஒத்திவைத்து விட்டு வேகமாக எழுந்து சென்று விட்டார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பாக கூறிக் கொண்டு டெல்லிக்கு பலமுறை சென்றதாலும், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பல மாதங்களாக தங்கியதாலும், அரசுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் இழப்பை ஏற்படுத்தி விட்டார் ஜோதி.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை வசூலிக்க வேண்டும் என்று கோரி ஜோதி மீது சிபிசிஐடி போலீஸில் வழக்கறிஞர் அமர்நாத் என்பவர் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் ஜோதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து ஜோதி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், ஜோதிக்கு முன் ஜாமீன் கொடுத்தார்.
மேலும், 10 லட்சத்து 27 ஆயிரத்து 504 ரூபாய் தொகையை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜோதி டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
மேலும், ரூ. 25 ஆயிரத்திற்கு பிணையத் தொகை மற்றும் அதே தொகைக்கு ஒரு நபர் உத்தரவாதத்தையும் ஜோதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவில் மாற்றம் கோரி ஜோதி நீதிபதி சுதந்திரத்திடம் மனு தாக்கல் செய்திருந்தார். ரூ. 10,27,504 டெபாசிட் செய்ய வேண்டும், ரூ. 25 ஆயிரம் பிணையத் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும் தனக்கு பத்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என எப்படி உத்தரவிட்டீர்கள் என்றும் ஜோதி கேட்டிருந்தார். பணத்தைக் கட்டினால்தான் முன் ஜாமீன் வழங்க முடியும் என்ற கூறவும் சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. தனது மனு மீது ஜோதியே ஆஜராகி வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுதந்திரம், எனது தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று கோருகிறீர்களா அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோருகிறீர்களா என்று கேட்டார்.
அதற்கு ஜோதி, முந்தைய உத்தரவை மாற்ற வேண்டும் என்று கோரினார். இதனால் கோபமடைந்த நீதிபதி, நான் உள்பட எந்த நீதிபதியாலும், பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது. நிபந்தனைப்படி பணத்தை டெபாசிட் செய்துதான் ஆக வேண்டும் என்றார்.
ஆனால் ஜோதி விடாமல் பணம் கட்ட வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும் என்று தீர்மானமாக வலியுறுத்தினார்.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி, இந்த நீதிமன்றத்தில் எனது உத்தரவை மாற்றவோ அல்லது மறுஆய்வு செய்யவோ யாரும் கிடையாது. உங்களுக்கு மாற்றம் தேவை என்றால் உச்சநீதிமன்றத்தை அணுகி முறையிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
மேலும் ஜோதியின் மனுவை பைசல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் உரத்த குரலில் நீதிபதி சுதந்திரத்தின் பெயரைச் சொல்லி கூப்பிட்ட ஜோதி, கடுமையாக வாதிட ஆரம்பித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, மனு மீதான உத்தரவை ஒத்திவைப்பதாக கோபமாக கூறி விட்டு எழுந்து தனது அறைக்குச் சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை ஜோதியும், அதிமுக வழக்கறிஞர்களும் போய் சந்தித்து இதில் நீங்கள் தலையிட வேண்டும் என்றும் கோரினர்.
இதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நாளை (இன்று) நடைபெறும். அதுவரை உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டாம் என நீதிபதி சுதந்திரத்திடம், தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி நீதிபதி சுதந்திரம் நேற்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இந் நிலையில் இந்த மனு மீண்டும் நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.