ராமதாஸ் நிலத்தை மீட்க வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி!
மதுரை: வன்னியர் அறக்கட்டளை சார்பில் கல்லூரி அமைக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கையகப்படுத்திய நிலத்தை அரசு மீட்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரி அமைக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 100 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். இதை தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். எனவே அந்த நிலங்களை பாமக நிறுவனர் ராமதாசிடமிருந்து தமிழக அரசு மீட்க வேண்டும்.
திண்டிவனம், ஒலப்பூர், கீழ்பாதி, நல்லூர், செல்லூர், ஜங்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலித் மக்களிடம் உள்ள இடங்களை டாக்டர் ராமதாசும், அவரது உறவினர்களும் மிரட்டி வாங்கியுள்ளனர். அதை தமிழக அரசு மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ் கல்லூரியையும் இடித்து அதை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும். இதில் கூட்டணி கட்சி என்று பார்க்க கூடாது.
அந்த இடம் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று கூறினால் அந்த அறக்கட்டளையில் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்பு மணியும் உறுப்பினர்களாக உள்ளனரா என்று பார்க்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சியின் மண்டல மாநாடு பிப்ரவரி மாதம் 24 ம் தேதி மதுரையில் நடைபெரும் அதில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம் என்றார் அவர்.