170 தமிழக மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர கடலோர காவல் படை
சென்னை காசிமேடு துறைமுகத்தை சேர்ந்த 170 மீனவர்கள் 26 விசை படகுகளில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
ஆந்திர கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். வழக்கமாக 10 நாட்கள் தங்கியிருந்து மீன் பிடிப்பார்கள். ஆனால் வங்கக் கடலில் திடீரென்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கடலின் சீற்றம் அதிகமானது. அதனால் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆந்திர எல்லைக்குள் நுழைந்து காக்கி நாடா மீன்பிடி துறைமுகத்தை நோக்கி சென்றனர்.
ஆனால் அங்கிருந்த ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவர்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த ஆந்திர கடலோர காவல்படை போலீசார் ஆந்திர எல்லைக்குள் வந்த தமிழக மீனவர்கள் சுற்றி வளைத்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் காசிமேடு பகுதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர் சங்கத் தலைவர் ரகுபதி தலைமையில் மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, ஆந்திர அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் பேசி மீனவர்களை பத்திரமாக அனுப்பக் கேட்டுக் கொண்டார்.
அவரது உத்தரவையடுத்து தமிழக மீன்வளத்துறை உதவி இயக்குனர் நகருல்லா தலைமையில் காசிமேடு மீனவர் சங்கத் தலைவர் உட்பட 12 பேர் கொண்ட குழு மீன்வர்கள் பத்திரமாக மீட்க ஆந்திரா விரைந்துள்ளது