தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதால் தென் தமிழகம் முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி , தலைஞாயிறு , மயிலாடுதுறை , நாகப்பட்டணம் , சீர்காழி ,
வேதாரண்யம், காரைக்கால், ஒரத்தநாடு, திருவாரூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தென்மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் தென் தமிழகத்தின் கடலோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும்.
அதனால் மீனவர்கள் எவரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.