ஆந்திராவில் பிடிக்கப்பட்ட 186 சென்னை மீனவர்கள் விடுதலை
சென்னை: ஆந்திர கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த 186 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்த 186 மீனவர்கள் கடந்த 7ம் தேதி காசிமேடு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க 26 விசைப் படகுகளில் சென்றனர்.
அவர்கள் ஆந்திர கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அதிக கடல் சீற்றம் இருந்ததால், அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகப் பகுதிக்குள் நுழைந்து விட்டனர்.
உடனே துறைமுகத்தில் இருந்த கடலோர காவல் படையினர் அத்துமீறி துறைமுகப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி 186 மீனவர்களையும் கைது செய்து, அவர்களுடைய விசைப்படகுகள், மீன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி உடனே காசிமேடு பகுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பகுதியில் உள்ள விசைப்படகு உரிமையாளர்கள் மீனவர் சங்கத் தலைவர் ரகுபதி உதவியுடன், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரை கே.பி.பி.சாமியை சந்தித்து முறையிட்டனர்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காக்கிநாடா துறைமுக அதிகாரிகளுடன், மாநில மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நேற்று மதியம் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.