பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் - இளங்கோவன்
சென்னை: பேனா முனையை விட எதுவும் வலிமையானதல்ல. எனவே பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இலங்கையைச் சேர்ந்த 20 பத்திரிக்கையாளர்கள், இதழியல் படிப்பில் 6 மாத டிப்ளமோவை முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இளங்கோவன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஈழப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும். தமிழகத்தில் சிலர் இதை அரசியலாக்க முயன்று வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும். இதில் இலங்கைப் பத்திரிக்கையாளர்களின் பங்கு அதிகம் உள்ளது.
தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க உங்களது பேனாக்களைப் பயன்படுத்துங்கள். பேனா முனை கத்தி முனையை விட வலிமையானது, கூரானது. அப்படி இருக்கையில், துப்பாக்கிகளும், ஆயுதங்களும் எதற்கு.
எனவே இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். தங்களது பேனாவின் வலிமையால் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட உதவ வேண்டும்.
சுதந்திரப் போராட்ட காலத்தின்போது பத்திரிக்கைகள்தான் முக்கியப் பங்கு வகித்தன. இந்தியாவை வல்லரசாக்கவும் அதே பத்திரிகைகள்தான் உதவ வேண்டும். மீடியாவின் சக்தி மற்ற எதையும் வலிமையானது என்றார் இளங்கோவன்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழ வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, துணைவேந்தர் பி.சத்யநாராயணன், இலங்கை துணைத் தூதர் பி.எம்.அம்ஸா, இலங்கை பத்திரிக்கை கழக இயக்குநர் ரங்க கலன்சூரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.