இந்தியாவை தேடி வரும் முதலீடுகள்-ப.சிதம்பரம் பெருமிதம்
சென்னை: கடந்த காலங்களில் உலக வங்கியிலிருந்து கடன் வாங்கினோம். ஆனால் இப்போது முதலீடுகள் தானாக தேடி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் இந்திய பொருளாதாரம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது,
உலகப் பொருளாதாரத்தை இந்தியாவும், சீனாவும் பங்கு போட்டுக் கொள்ளும் நிலை தற்போது நடந்து வருகிறது. இந்தியாவுக்கு அந்நிய முதலீடுகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறது. 1991ம் ஆண்டு இருந்த நிலை மாறி அதற்கடுத்த 17 வருடங்களில் இந்திய பொருளாதாரம் அபரிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
கடந்த காலங்களில் உலக வங்கியிலிருந்து கடன் வாங்கினோம். ஆனால் தற்போது முதலீடுகள் தானாக தேடி வருகின்றன். தொழில் நுட்பமும், கல்வியறிவும் நமது நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும். விவசாயம் தவிர மற்ற எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு தர வேண்டும்.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளை கூட பார்க்கவில்லை. 50 சதவீத குழந்தைகள் ஆரம்ப கல்வியை தாண்டுவதில்லை. 9 சதவீத குழந்தைகள் மட்டுமே கல்லூரிக்குள் நுழைகின்றன. 19 முதல் 24 வயது நிரம்பியவர்களில் 5 சதவீதம் மட்டுமே தொழிற்கல்வி பயிலுகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளிகளில் ஊட்டச்சத்து உணவு தரப்படுகிறது. எனவே 7 வயதுக்கு குறைவான எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் இந்தியா முன்னேறும்.
இந்தியாவில் வெளிப்படையான சமூகம் அமைய வேண்டும். அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும். பரீட்சார்த்த முறையில் திட்டங்களை செயல்படுத்தினால் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
கடந்த வருடம் இன்டர்நெட் மூலம் வருமானவரி செலுத்தலாம் என்று அறிவித்தோம். 3 உயர்நீதிமன்றங்கள் இதற்கு தடை விதித்தன. ஆனால் இப்போது அந்த முறை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நமக்குள்ள அடிப்படை வசதிகளை பயன்படுத்த வேண்டும். சேமிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிராம அளவில் எல்லாரும் சேமிப்பை முக்கியமாக கொள்ள வேண்டும். சோதனை முயற்சியில் ஈடுபடும்போது சில தோல்வி அடையும். அதற்காக முயற்சிகளை கைவிட முடியாது.
சோதனை முறையிலான முயற்சிகளை எடுத்தால் தான் பொருளாதார வளர்ச்சி அடைய முடியும் என்றார் சிதம்பரம்.