For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு: கேரள முதல்வருடன் பேச கருணாநிதி சம்மதம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும், அதை தான் ஏற்றுக் கொண்டதாகவும், பேச்சுவார்த்தைக்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி வந்துள்ளார்.

நேற்று பிரதமரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேச வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்தார். அவரது யோசனையை நான் ஏற்றுக் கொண்டேன்.

மேலும், உச்சநீதிமன்றம் முன்பு அறிவுறுத்தியபடி கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் பிரதமரிடம் விளக்கினேன்.

மீண்டும் கேரள முதல்வருடன் பேச தயக்கம் இல்லை. அதுகுறித்த தேதி கேரள முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

பேச்சுவார்த்தையால் பலன் கிடைக்குமா என்று பிரதமரிடம் கேட்டேன். அதற்கு அவர் மீண்டும் கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். பலன் கிடைத்தால் உங்களுக்கு நல்லதுதானே என்றார்.

பாமகவின் விமர்சனத்தால் பாதிப்பில்லை:

கூட்டணிக் கட்சியான பாமகவின் தொடர் விமர்சனத்தால், திமுகவை அது எந்த அளவுக்கும் பாதிக்காது.

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், மாநிலத்திற்குள் பாய்கிற நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

மேலும் தென் மாவட்டங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் - திண்டுக்கல் அகல ரயில் பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற திட்டக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

ஐஐஎம் எனப்படுகிற இந்திய மேலாண்மை நிறுவனத்தை கோவையில் அமைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் ஒரு மத்திய பல்கலைக்கழத்தை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.

தமிழகத்தில் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி ஆகிய இரு இடங்களில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம்:

சேது சமுத்திரத் திட்டத்தில் மதத்தை இழுக்க விரும்பவில்லை. ராமருக்கும், சேது சமுத்திரத் திட்டத்திற்கும் என்ன தொடர்பு? சேது சமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.

ராமர் பாலம் அங்கே இருக்கிறதா? அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொன்னபோது ராமர் பாலம் அங்கே இருந்ததாக சொல்லப்பட்டதா? வாஜ்பாய் அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியபோது ராமர் பாலம் பற்றிச் சொல்லப்பட்டதா?

மலேசியா மற்றும் இலங்கை போன்ற பிரச்சினைகள் வெளிநாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகள். எனவே மத்திய அரசு அரசு முழுக்க முழுக்க பொறுப்பேற்று செய்ய வேண்டிய நிலைமை இருப்பதால், மத்திய அரசின் இந்த விவகாரங்களில் நான் குறுக்கிடவில்லை,.

மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அங்கே இந்திய மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. அதை கெடுக்கக் கூடாது என்றார் கருணாநிதி.

தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, முதலில் இந்தக் கேள்வியை வைகோவிடம் கேட்டு விட்டு பிறகு என்னிடம் கேளுங்கள் என்றார் கருணாநிதி.

நெல்லை மாநாட்டில் ஸ்டாலின் குறித்து எதிர்பார்க்கும் செய்தி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நான் திமுக சார்பாக எந்த முடிவை எடுத்தாலும், பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி, அந்த குழுக்களின் சார்பாக எடுக்கப்படுகிற முடிவுகளைத்தான் அறிவிப்பேன் என்றார்.

எப்போது இந்தக் குழுக்கள் கூடும் என்ற கேள்விக்கு கூடுவதற்கு முன் கூட்டியே தேதி அறிவிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X