மழையில் குழந்தைகளுடன் 2 நாள் தவித்த அகதிகள்
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர், வெட்ட வெளியில், கொட்டும் மழையில் 2 நாட்கள் பரிதவித்தனர். அவர்களை போலீஸார் மீட்டு முகாமில் சேர்த்தனர்.
இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு படகில் தமிழகத்திற்குத் தப்பி வந்தனர். இவர்கள் படகில் வந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார்.
அப்போது பலத்த மழை கொட்டியது. இரு குழந்தைகளுடன் இந்த 6 பேரும் வெட்ட வெளியில், மழையில் நனைந்தபடி இரு நாட்கள் பரிதவித்தனர். தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் விரைந்து சென்று இவர்களை மீட்டு விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழர் பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், வெளியில் நடமாடக் கூட முடியவில்லை, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை, தினசரி சாப்பாடு என்பதே கனவாக மாறியுள்ளது என்று அகதிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.
உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இனியும் வசிப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டதால்தான் தங்களது உயிரைப் பணயம் வைத்து, தலா ரூ.15,000 படகுக் கட்டணமாக செலுத்தி தப்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.