இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்: எக்சிட் போல்
டெல்லி: இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என அங்கு ஸ்டார் நியூஸ் சானல் நடத்திய எக்சிட் போல் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
இதையடுத்து இங்கு நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை ஸ்டார் நியூஸ் சானல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் வசமிருந்து பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 இடங்களை பாஜக பிடிக்கும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையை விட இம்முறை 24 தொகுதிகள் பாஜகவுக்குக் கூடுதலாக கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பாஜகவுக்கு 16 தொகுதிகள் கிடைத்தன.
காங்கிரஸ் கட்சி இந்த முறை 24 இடங்களை இழந்தது. 19 இடங்களே அக்கட்சிக்கு கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் வெற்றி பெற்றால் தங்களது கட்சி சார்பில் பிரேம் குமார் துமால் முதல்வர் ஆவார் என்று ஏற்கனவே பாஜக அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.