கொழும்பில் ரயில் மீது கண்ணிவெடி தாக்குதல்: 300 பயணிகள் தப்பினர்
கொழும்பு: கொழும்பில் பயணிகள் ரயில் மீது நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திரிகோணமலையில் இருந்து கொழும்பு சென்ற ரயில் நேற்றிரவு 8.30 மணியளவில் கண்ணி வெடியில் சிக்கியது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கரமாக வெடித்து சிதறியதில் ரயில் என்ஜினும், தண்டவாளமும் சேதமடைந்தன.
ஆனால், இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த 300 பயணிகளும் உயிர் தப்பினர். விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
பிரபாகரன் காயம் உண்மை-இலங்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விமானப்படை தாக்குதலில் காயமடைந்தது உண்மை என்று இலங்கை ராணுவம் மீண்டும் கூறியுள்ளது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தார் என்ற செய்தியை கொழும்பிலிருந்து வெளியாகும் தி நேஷன் இதழ் வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த செய்தியை விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் மறுத்ததுடன், பிரபாகரனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை, அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியதாவது,
கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் என்ற இடத்தில் கடந்த மாதம் 26ம் தேதி மாலை 5.25 மணிக்கு இலங்கை விமானப்படை விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியது.
அப்போது பதுங்கு குழி சரிந்ததில் அதிலிருந்த பிரபாகரன் காயமடைந்து விட்டார். ஆனால் அவருக்கு எந்தளவு காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என்றனர்.
பிரபாகரன் குறித்து இலங்கை எத்தனையோ புரளிகளை இதற்கு முன்பும் கிளப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியும் புரளியா என்பது தெரியவில்லை.