பக்ரீத்: ஒட்டகம் வெட்ட தடை இல்லை
சென்னை: பக்ரீத் பண்டிகையொயைட்டி ஒட்டகத்தை பலி கொடுக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையின்போது, ஆடுகள், ஒட்டகங்களை பலியிடப்படுவது வழக்கம். குர்பானி என்று இதற்குப் பெயர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்பட்டன. இதை எதிர்தது பிராணிகள் நலவாரியம், பல்வேறு அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒட்டகம் வெட்ட தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் ஒட்டகத்தைப் பலி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதும் ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தவ்ஹீத் ஜமாத் கட்சி சார்பில் நான்கு ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன
இதையடுத்து கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்த வக்கீல் ராஜேந்திரன் ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி இதுதொடர்பாக முறையிட்டார்.
அவர் கூறுகையில், இந்த ஆண்டு 80 ஒட்டகங்களை குர்பானி கொடுக்க கொண்டு வந்துள்ளனர். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இதை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் கோரினார்.
ஆனால் ஒட்டகம் வெட்டி குர்பானி கொடுப்பது மத வழக்கம் என்பதால் இதற்குத் தடை விதிக்க முடியாது. மேலும் இதை அவசர வழக்காகவும் விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சசீதரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.