கார் ஏற்றி 3 பேரை கொன்ற என்இபிசி தலைவர் மகன் சரண்-ஜாமீனில் விடுதலை!
சென்னை: சென்னையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியும், பிளாட்பாரத்தில் கார் ஏற்றியதாலும் 3 பேர் பலியாக காரணமாக இருந்த விபத்தில் தேடப்பட்டு வந்த டெல்லி தொழிலதிபரின் 15 வயது மகன் அச்சல் கெம்கா நேற்று சென்னை சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு சிறுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
என்.இ.பி.சி. குழு தலைவர் ரவி பிரகாஷ் கெம்காவின் மகன் அச்சல் கெம்கா. 15 வயதாகும் இவர் சிங்கப்பூரில் படித்து வருகிறார். விடுமுறைக்காக சென்னைக்கு வந்திருந்த கெம்கா, கடந்த 13ம் தேதி நள்ளிரவில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போய் விட்டு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாஞ்சிநாதன் என்பவர் இறந்தார். பின்னர் கார் பிளாட்பாரத்தில் ஏறியதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 2 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அச்சல் கெம்காவை போலீஸார் தேடி வந்தனர். அவர் டெல்லிக்குப் போய் விட்டதாக வீட்டில் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து டெல்லிக்குத் தனிப்படை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கெம்காவைக் காப்பாற்ற சில பெரும்புள்ளிகள் போலீஸாருக்கு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கினர். இருந்தாலும் போலீஸார் தங்களது விசாரணையை தளர விடவில்லை.
இந்த நிைலயில், அச்சல் கெம்காவின் சார்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் மைனராக இருப்பதால், சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் என அறிவுறுத்தியது. 10 நாட்களுக்குள் சரண் அடைய வேண்டும் எனவும் கெடு விதித்தது.
இதையடுத்து அச்சல் கெம்கா, நேற்று மாலை சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக் கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே சந்திரகாந்த் சர்மா என்பவர், தான்தான் அன்றைய தினம் காரை ஓட்டியதாக கூறி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் அவர் ஜாமீனிலும் வெளியே வந்து விட்டார். சர்மா, ரவி பிரகாஷ் கெம்காவின் அலுவலகத்தில் பணியாற்றுபவர் என்று கூறப்படுகிறது.
ஆனால், காரை ஓட்டியது அச்சல் கெம்காதான். அதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று போலீஸ் தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது.