கருணாநிதி - சோனியா சந்திப்பு: வெள்ள பாதிப்பு குறித்து விளக்கம்

டெல்லி: முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் தந்து உதவ மத்திய அரசை கேட்டுக் கொள்ளுமாறு கோரினார். மேலும் தமிழக மழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், சோனியா காந்தியிடம், கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் நடந்த பேச்சு வார்த்தை குறித்து விளக்கினேன்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து என்னிடம் சோனியா காந்தி கேட்டார். நானும் பாதிப்புகள் குறித்து விளக்கினேன். மேலும் மின்சாரப் பற்றாக்குறை குறித்தும் சோனியாவிடம் பேசினேன். இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சருடன் பேசி மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் தந்து உதவுவமாறு கேட்டுக் கொண்டேன்.
கேரள முதல்வருடன் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முன்பிருந்த நிலையை விட தற்போது சற்று முன்னேற்றத்தை உணர முடிகிறது.
நீரின் அளவை அதிகரித்தால் அணை உடைந்து விடும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என கேரள அரசு கருதுகிறது. ஆனால் அணை போதுமான பலத்துடன் இருப்பதாக தமிழகத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழக அரசின் கருத்தையே, மத்திய நீர் வள கமிட்டியும், அணையைப் பரிசோதித்த பின்னர் ஆமோதித்துள்ளது.
இதுதொடர்பாக இரு மாநிலங்களையும் சாராத நிபுணர்களைக் கொண்ட சுயேச்சையான குழுவை அமைத்து, அணையின் பலம் குறித்து மத்திய அரசு ஆராயலாம் என தமிழகத்தின் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு கேரள முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையும் தொடரும். இதை கொண்டே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் கூறுகிறேன்.
சோனியா காந்தியிடமும் இதுகுறித்து விளக்கினேன். மேலும் தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், நக்சலைட்டுகளை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் சோனியாவிடம் விளக்கினேன். தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு, தேனி மாவட்டத்தில் ஐந்து நக்சலைட்டுகள் சுட்டுப் பிடிக்கப்பட்டதே சிறந்த சாட்சியாகும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications