'லேட்'டாக வந்ததால் 11 பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுத்த விமானி!
சென்னை: விமானம் கிளம்பிய பிறகு வந்த 11 பயணிகளை விமானத்தில் ஏற்றிக் கொள்ள விமானி மறுத்ததால், அந்த 11 பேரும் வேறு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்குச் செல்லும் ஏர் டெக்கான் விமானம் நேற்று மாலை 4.30 மணியளவில் சென்னையிலிருந்து 75 பேருடன் கிளம்பியது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குத் திரும்பியது.
இந்த நிலையில் அந்த விமானத்தை உரிய நேரத்தில் பிடிக்க முடியாமல் தவற விட்டு விட்டு விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த 11 பயணிகளுக்கு தாங்கள் செல்ல வேண்டிய விமானம் மீண்டும் வந்திருக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானத்தில் ஏற அவர்கள் சென்றனர். ஆனால் அவர்களை ஏற்றிக் கொள்ள விமானி மறுத்து விட்டார். விமானம் உரிய நேரத்தில் கிளம்பி விட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே திரும்பி வந்துள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களைக் கூறி 11 பேரையும் ஏற்றிக் கொள்ள முடியாது என்று விமானி கூறி விட்டார்.
இதையடுத்து வேறு ஒரு டெக்கான் விமானத்தில் அவர்கள் கொல்கத்தா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இறங்க முடியாமல் தவித்த விமானம்:
இதற்கிடையே கொழும்பிலிருந்து திருச்சிக்கு வந்த இலங்கை விமானம், விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்தது. இதனால் விமானத்தில் இருந்த 115 பயணிகளும் பெரும் பீதியடைந்தனர்.
இலங்கையிலிருந்து நேற்று பிற்பகல் 1 மணிக்கு 115 பயணிகளுடன் திருச்சி வந்த விமானம், விமான நிலைய பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக ரன்வே சரியாக தெரியாமல், இறங்க முடியாமல் தவித்தது.
நீண்ட நேரமாக வானிலேயே அந்த விமானம் சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
இந்த நிலையில் ரன்வே தெளிவாக தெரியும் வகையில் பிரகாசமான விளக்குகள் எரிய விடப்பட்டன. மேலும் நைட் லேண்டிங்குக்கான விளக்குகளும் எரிய விடப்பட்டன. இதையடுத்து விமானம் தரையிறங்கலாம் என வான் கட்டுப்பாட்டு மையத்தினர் விமானிக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து விமானம் ஒரு வழியாக தரையிறங்கியது. அதன் பின்னரே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.