16 மலேசியத் தமிழர்கள் மொட்டை போட்டு நூதன போராட்டம்
சிங்கப்பூர்: இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் மீது எந்தவித விசாரணையும் இல்லாமல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 16 தமிழர்கள் மலேசிய முருகன் கோவிலில் மொட்டை அடித்துப் போராட்டம் நடத்தினர்.
ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலேசிய அரசு நடவடிக் எடுத்து ஐவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கோலாலம்பூர் பேரணி தொடர்பாக கைது செய்யப்பட்ட 31 தமிழர்கள் மீதான கொலை முயற்சிகளை கைவிட்டு விட்ட மலேசிய அரசு, ஹிண்ட்ராப் அமைப்பினர் ஐவர் மீதான வழக்குகளை இன்னும் வாபஸ் பெறவில்லை.
இந்த நிலையில் ஹிண்ட்ராப் அமைப்பினரை விசாரணையே இல்லாமல் சிறையில் அடைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தமிழர்கள் மலேசியாவில் மொட்டை அடித்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
மலேசியாவில் உள்ள நூற்றாண்டு கால பழமை வாய்ந்து பட்டு குகை முருகன் கோவிலில் இந்த நூதனப் போராட்டம் நடந்தது.
ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, பட்டு குகை கோவில் பகுதியில் அமைதியான முறையில் கூடி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அந்தப் பதாகைகளில் ஹிண்ட்ராப் அமைதிப் போராட்டம் என்ற வாசகம் தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருந்தது.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி முருகன் சன்னதியில் சிறப்புப் பூஜைகள் செய்தனர். மேலும், 16 பேர் மொட்டை போட்டுக் கொண்டு நூதனப் போராட்டத்தையும் நடத்தினர்.
இதற்கிடையே, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் ஜோஹார் மாகாண தலைவர் கே.எஸ். பாலகிருஷ்ணன், ஹிண்ட்ராப் அமைப்பினர் கூறுவது போல மலேசியத் தமிழர்கள் ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஜோஹார் மாகாணத்தில், தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கடந்த ஆண்டுகளில் 90 லட்சம் மலேசியன் டாலர் பணம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் புதிய தமிழ் பள்ளிகளைக் கட்டுவதற்காக 20 லட்சம் மலேசிய டாலர் பணத்தை மாகாண அரசு ஒதுக்கியது என்றார் அவர்.