திருவோடு ஏந்தி திமுக கவுன்சிலர் நூதன போராட்டம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் திருவோடு ஏந்தி திமுக கவுன்சிலர் நூதன போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவில் திட்டக்குடி, சூராங்காடு, எட்டுபுலிகாடு குழுவின் உறுப்பினராக இருப்பவர் கோவிந்தராஜ். இவர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு காவி உடை அணிந்து, திருவோடு ஏந்தி வந்தார். அவர் வருகையை கண்டு திடுக்கிட்ட உறுப்பினர்களும் பொது மக்களும் அங்கு குவிந்தனர்.
அப்போது கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, நான் திமுகவில் கடந்த 35 வருடங்களாக உள்ளேன். மாவட்டச் செயலாளர் பாராட்டும் வகையில் செயல்பட்டு வந்துள்ளேன். திமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனா தேவி, துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோரை நாங்கள் தான் தேர்வு செய்தோம்.
ஆனால் கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்தை இவர்கள் மதிப்பதில்லை, ஏற்பதும் கிடையாது. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முறையான நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. அப்படியே நிதி ஒதுக்கீடு செய்தாலும் அதற்கான வேலைகளில் ஈடுபடும் போது அவர்களது தலையீடு அதிகமாகவே உள்ளது.
இதை உணர்த்த தான் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினேன். இதற்கும் தலைவர், துணைத் தலைவர் செவி சாய்க்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.